
அசுரர்களை அழிக்க துர்க்கை புறப்பட்டபோது, துர்க்கைக்கு படைத்தலைவனாக அவளுக்கு உதவும் பொருட்டு சிவபெருமானால் (தம் அம்சமாக) அனுப்பப்பட்டவர்தன் பைரவர். இவர் தீய சக்திகளையும், ஏவல், பில்லி, சூனியம் போன்றவற்றையும் அழிப்பவர்.
கால பைரவரோடு இருக்கும் நான்கு நாய்களையும் நான்கு வேதங்களாக கூறுவர். சிவன் ஒவ்வொரு கால கட்டத்திலேயும் தன்னை ஒவ்வொரு ரூபத்தில் வெளிப்படுத்தி பக்தர்களுக்கு அருள்புரிகிறார். அவ்வாறு அவர் காட்சி தந்த ரூபமே காலபைரவ மூர்த்தி ரூபமாகும். இப்படித் தோன்றிய சிவன் ‘சண்டாளர்’ எனப்படுகிறார். சண்டாளர் என்றால், மக்களின் கொலை பாதக உணர்வுகளை விரட்டக்கூடியவர் என்று பொருள்.
இப்பைரவ மூர்த்தி சிவாலயங்களில் காவல் தெய்வமாக நியமிக்கப்பட்டவர். வழிபாடு முடிந்து சிவாலயம் மூடப்பட்டு தாழிட்ட பிறகு, அக்கோவிலின் சாவியை பைரவமூர்த்தி சந்நிதியில் வைப்பது காலங்காலமாக இருந்துவரும் வழக்கம். சனீஸ்வரின் குருநாதர் இவர்.
இவற்றில் எட்டு வகையான பைரவக் கோலங்கள் மிகவும் சிறப்பானவை. சில சிவாலயங்களில் பைரவரும் சனீஸ்வரனும் அருகருகே காட்சி தருவார்கள். இவர்களை அஷ்டமியிலும் (தேய்பிறை) சனிக்கிழமைகளிலும் அர்ச்சித்து வழிபடுவது சிறப்பு. இவ்வாறு வழிபடுவதால், விரோதிகளால் ஏற்படும் தொல்லை, ஏவல், பில்லி, சூனியம், சனிதோஷம் போன்றவை நீங்கும் என்று கூறப்படுகிறது.
பைரவக் கோலங்களிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று ஜோதிட நூல்களில் குறிப்பிடப்படுபவர் காலபைரவர். இவரை கால புருஷர், பிரம்ம சிரச்சேதர் என்றும் கூறுவர். ஜோதிட நூல்கள் இவரை காலமே உருவமான கடவுள் என்கின்றன. 12 ராசிகளும் இவர் உடம்பின் பகுதிகளாகும்.
பிருஷத் ஜாதகம் என்னும் நூல், உடம்பின் பகுதிகளாக, மேஷம்-தலை, ரிஷபம்-வாய், மிதுனம்-கைகள், கடகம்-மார்பு, சிம்மம்-வயிறு, கன்னி-இடை, துலாம்-புட்டம், விருச்சிகம்-லிங்கம், தனுசு-தொடை, மகரம்-முழந்தாள், கும்பம்-காலின் கீழ்ப்பகுதி, மீனம்-பாதம் என்று கூறுகிறது. காலபைரவரின் உடம்பில் பூமியைத் தாங்கும் எட்டு நாகங்களும் மாலைகளாக இருந்து அலங்கரிக்கின்றன.
0 கருத்துகள்